Tuesday, December 13, 2011

அடங்காபதியில் வாழ்ந்த ஆதிகுடிகளும் ,அவர்களை வன்னியர்கள் அடக்கியதும் :

அடங்காப்பதியில் வாழ்ந்த ஆதிக்குடிகள்

வன்னியர்கள் இலங்கைக்கு வருமுன் அடங்காப்பதியில் வாழ்ந்த மக்களினங் காரணமாகவே அதற்கு அப்பெயரிட்டிருத்தல் வேண்டும். அப்பொழுது அம்மக்கள் யாருக்கு மடங்காதவர்களாய் வாழ்ந்தனர் என்பது இதனால் வெளிப்படையாகிறது. வன்னியர் வருவதற்கு முன், அடங்காப் பதியிலுள்ள ஊர்களாய முள்ளி மாநகரிற் சாண்டார் அரசாண்டனர் என்றும், கணுக்கேணியில் வில்லிகுலப்பறையர் அரசு செலுத்தினர் என்றும் தனிக்கல்லிற் சகரன் என்றும், கிழக்கு மூலையில் இராமருக்குத் தோற்றேயகன்ற ராட்சதர்ஆட்சி செலுத்தினர் என்றும், மேற்கு மூலையில் அவர்களுள் இழிந்தோராட்சி நடந்ததென்றும் வையாபாடல் கூறும். எனவே, அடங்காப்பதியில் வாழ்ந்த ஆதிக்குடிகள் இவர்களெனல் சாலும். இவர்கள் அப்பொழுது அப்பகுதியைத் தனிக்கல், கணுக்கேணி, முள்ளிமாநகர், கிழக்கு மூலை, மேற்கு மூலை எனவைந்து பகுதிகளாகப் பிரித்தரசாண்டனர் என்பதும் இவற்றாற் புலனாகும்.

அடங்காப்பதி வாழ் ஆதிக் குடிகளை வன்னியர் அடக்கியமை

வையாபாடலின்படி, கணுக்கேணியில் அரசுசெலுத்தி வாழ்ந்த வில்லி குலப் பறையரைத் திடவீரசிங்கனென்ற வன்னியன் போரில் வென்று அப்பகுதிக்கதிபதியானான். சந்திரவன் என்ற சாண்டார் தலைவனை அவன் பதியாகிய முள்ளிமா நகரிலே போர் செய்து வென்று அப்பற்றை ஆண்டான் மெய்த்தேவன் என்ற வன்னியன். தனிக்கல்லிலே வாழ்ந்த வேடர்கள் தலைவராய சகரன், மகரன் என்பவரை வென்று அவர் குலத்தை அழித்து ஆங்கரசு செய்தான் வாகுதேவன் என்ற வன்னியன், இளஞ்சிங்கவாகென்ற வன்னிய வீரன் இராட்சத குலத்தினரைப் போரில் அழித்து, அவர்கள் வாழ்ந்த கிழக்கு மூலை, மேற்கு மூலையாகிய பகுதிகளைப் கைப்பற்றியாண்டான். இவனோ பின்னர் வன்னி நாடு முழுவதற்கும் அதிபதியானான்





இந்நு}ல் கூறும் ஏனைய வன்னியர்

காலிங்கரும் கட்டையரும் கச்சாயிற் குடியேறி வாழ்ந்தனர். தெல்லி என்ற வன்னியன் பழையென்ற ஊர் சென்று வதிந்தான். மூக்கையினர் (யாப்பையினார்) கேப்பையினார் ஆகியோர் கரைப்பற்றில் வாழ்ந்தனர். ஊமைச்சி என்ற பெண் கருவாட்டுக்கேணி என்ற இடத்திற் குடியமர்ந்தாள். அங்கசன் (அங்கசிங்கன்) கட்டுக்குளப் பற்றிலமர்ந்தான். சிங்கவாகு திருகோணமலையை யடைந்தான். வெருகல் தம்பலகாமம் ஆயபகுதிக்கு மாமுகன் சென்றான். கொட்டியாரப்பற்றிற் சுபதிட்டன் அரசையாண்டான். மேலும், வையாபாடல், முகமாலையில் மூன்று வன்னியர்கள் வந்திருந்தார்கள் என்று கூறுகிறது. வீரமழவராயன், நீலமழவராயன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தார்கள் என்றும், பூபால வன்னிமை, கோபாலன் ஆகியோர் திரியாய். கட்டுக்குளப் பகுதியில் வாழ்ந்தனர் என்றும், வில்லராயன் நல்லு}ரில் வாழ்ந்தானென்றும் இந்நு}ல் காட்டுகின்றது. மற்றும், செட்டிகுளத்திலே தேவராயன், கொடிதேவன், கந்தவனத்தான் ஆகியோரும், பனங்காமத்திலே துங்கராயனும், துணுக்காயிலே சோதிநாதன். சிங்கவாகு ஆகியோரும் வசித்தனர்.