Sunday, December 4, 2011

மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 1


மருத்துவர் இராமதாசு, இந்தியாவிலே லல்லுவுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடத்தை தமிழகத்திலே இவருக்கு கொடுத்துள்ளன பத்திரிக்கைகளும் மற்றும் பலரும் ஒரு வித்தியாசத்தோடு, லல்லு எதை செய்தாலும் கோமாளித்தனமாகவும் இராமதாசு எதைச்செய்தாலும் ஆக்ரோசமாகவும் சொல்லால் தாக்குகின்றனர், இதைப்பற்றி இந்த கட்டுரையில் அலசுவோம்.



யார் இந்த இராமதாசு?
இவரின் பின்புலம் என்ன?
எப்படி இவர் தமிழக அரசியலிலே ஒரு முக்கிய புள்ளியாக உள்ளார்?

எப்படி இந்த மனிதனுக்கு இவ்வளவு அரசியல் செல்வாக்கு?

இவரையும் பின்பற்ற, இவர் சொல்வதையும் கேட்க எப்படி பல 
லட்சம் பேர் உள்ளனர்?
இந்த கேள்விகளுக்கான விடைகளும், அதன் பின்னுள்ள
சபால்ட்டர்ன்(அடித்தட்டு) மக்களின் எழுச்சியும் தான் இன்றைக்கு
பத்திரிக்கைகளாலும் மற்ற பலராலும் மருத்துவர் இராமதாசு
மட்டையடிக்கப் படுவதற்கான காரணம். இதற்கெல்லாம்
பதிலுரைக்க சில விடயங்களை சற்று விரிவாக பார்க்கவேண்டும்.

இராமதாசுவின் பின் புலம் வன்னிய சமுதாய மக்கள் தான்.
இது எல்லோரும் அறிந்ததுதான். அது எப்படி ஒரு சமுதாயமே
கண்மூடித்தனமாக இவரை பின் பற்றுகிறது.
(இதுதான் பலரின் வயிற்றெரிச்சலுக்கு காரணம்,
இதுவேதானமருத்துவர் இராமதாசு மீது சொல்லடியாக விழுகிறது).

முக்கியமான ஒரு தகவல், பலராலும் இதுவரை தவறாகவே
புரிந்துகொள்ளப்பட்ட விடயம், வட மாவட்டங்களிலே
வன்னியர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள்
எல்லாம் பெரும் பணக்காரர்களாகவோ, நிலக்கிழார்களாகவோ
இல்லை, பெரும்பாலானோர் ரெட்டியார்,முதலியார் (அ) உடையார்,
 நாயுடு சமுதாயத்தினரின் நிலங்களில் கூலி வேலை செய்தவர்களே.
 எனவே பெரும்பாலான வன்னிய சமுதாயத்தினர் பண
வசதிபடைத்தவர்கள் அல்ல, ஆதிக்க சாதியாகவும் இல்லை,
சமுதாயம் நலிவடைந்த நிலையிலேதான் இருந்தது.

சில தசம(பத்து) ஆண்டுகளுக்கு முன் வரை எந்தவித விழிப்புமின்றி
பொருளாதாரம், அரசியல், கல்வி என அனைத்திலும் நலிவடைந்தே
இருந்தது இச்சமூகம். இந்த சமயங்களிலே தென் தமிழகத்திலே
பெரும் எண்ணிக்கையிலிருந்த முக்குலத்தோர் சமூகத்தினர்
காங்கிரசிலும் பின் திராவிட கட்சிகளிலும் கோலோச்சினர்,
ஆனால் வட தமிழகத்தில் வன்னியர்கள் பெரும்
எண்ணிக்கையிலிருந்தாலும் ரெட்டியார்,உடையார் (முதலியார்)
சமுதாயத்தினர் கையில் தான் அரசியல் இருந்தது.

பெரும் எண்ணிக்கையிலிருந்தும் அரசியல் மற்றும் பொருளாதார
 முன்னேற்றமின்றி இருந்த சமூகத்தை உயர்த்தும் நோக்கத்தில்
திரு.இராமசாமி படையாட்சி அவர்கள் உழவர் உழைப்பாளர்
கட்சி என ஆரம்பித்து தேர்தலிலே போட்டியிட்டனர்,
தென்னாற்காடு மாவட்டத்திலே 18ல் 17 தொகுதிகளிளை
வென்றனர் யாருடைய கூட்டணியுமில்லாமல் அப்போது
முதுபெரும் தலைவர் காமராசர் அவர்கள் காங்கிரஸ் தலைவர்.

அப்போதே வன்னிய சமூகம் மாற்றத்துக்கு தயாராக இருந்தது,
சரியான வழிகாட்டுதலுக்காகவும், தலைவனுக்காகவும் ஏங்குவது
புரிந்தது. அதன் பின் காமராசர் அவர்கள் இராமசாமி படையாட்சி
 அவர்களிடம் பேசி காங்கிரசில் சேரச்செய்தார், இராமசாமி
அவர்களுக்கு மந்திரி பதவியும் அளித்தார், ஆனால் காங்கிரஸ்
 என்ற சமுத்திரத்திலே கலந்த சிறு ஓடையாகிவிட்டது.அதன்
பின் திரு இராமசாமி படையாட்சியார் மீதிருந்த பேரன்பினாலும்
பெரு மதிப்பினாலும் காங்கிரசை எதிர்த்து சமுதாய முன்னேற்றம்
என யாரும் பேசவில்லை.

அவரது கால கட்டத்துக்கு பிறகு மீண்டும் அதே இழிநிலை.
இந்த நிலையில் தான் 80 களின் தொடக்கத்திலே திரு ஏ.கே.நடராசன்
என்பவரால் வன்னியர் சங்கம் மீண்டும் உத்வேகம் பிடித்தது.
அப்போது திண்டிவனம் பொறுப்பாளராக இருந்தவர்தான்
மருத்துவர் இராமதாசு, திரு ஏ.கே.நடராசன் அவர்கள் அரசு
பணியிலிருந்ததால் அவரால் முழுமூச்சாக சமுதாயப்பணியிலே
 ஈடுபடமுடியவில்லை. அப்போது சமுதாயப்பணியாற்றிய
 போராளிதான் மருத்துவர் இராமதாசு, ஏதோ திடீரென ஒரு நாள்
வன்னிய சமூகம் மந்தையாடு மாதிரி அவர் பின்னால் போகவில்லை.
ஒரு நல்ல அற்பணிப்புள்ள தலைவனுக்காக ஏங்கிக்கொண்டிருந்தபோது
 மருத்துவரின் போராட்டகுணம், அற்பணிப்பை கண்டு மனமுவந்து
ஏற்றுக்கொண்டது வன்னிய சமூகம். மருத்துவர் இராமதாசு அவர்கள்
 அரசியல் சமூக வாழ்வில் எத்தனை கூட்டங்கள், எத்தனை
கிராமங்களிலே சுற்றுப்பயனம் செய்தார், எத்தனை கல்லடிகள்,
 எத்தனை தலைமறைவு இரவுகள் என்பது வெளி உலகுக்கு தெரியாது,
வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை,
இதுவெல்லாம் தெரியாமல் ஏதோ அவர் திடீரென அதிட்(ஷ்)டத்தினால்
தலைவரானது போல் எண்ணிக்கொண்டு பொறாமையால்

அவரை தாக்குகின்றனர்.

இனி அடுத்த கட்டத்திற்கு வருவோம்,
1987 அது வன்னிய சமூகத்திற்கு ஒரு மறக்க முடியாத ஆண்டு,
வன்னிய சமுதாயத்தின் கடைசி மனிதன் இருக்கும் வரை இந்த
ஆண்டு மறக்க முடியாதது. இதுவரை தமிழகம் சந்திக்காத
போராட்டத்தைவன்னிய சமுதாயத்தினால் சந்(சா)தித்தது. 
ஒருவார மறியல் போராட்டம், தமிழக தலைநகர் 
தென்மாவட்டங்களிலிருந்து துண்டிக்கப்பட்டது, வட மாவட்டம் 
முழுவதும் வாகனப்போக்குவரத்து இல்லை. இதில் நானும்தான்
 பாதிக்கப்பட்டேன் ஏழாவது படிக்கின்றபோது 4 கிலோமீட்டர்கள் 
நடந்து பள்ளிக்கு சென்றேன். அப்போது கூட எனக்கு கோபம் 
வரவில்லை என் சமூகத்துக்காக ஏதோ நடக்கிறது எனவே இந்த 
வலியை பொறுத்துக்கொள்ளவேண்டும் என தான் எண்ணினேன்.

நமது அதிகார அமைப்பு எப்போதுமே ஒரு பிரச்சினை பெரிதானப்பின்
 தான் நடவடிக்கை எடுக்கும் அதுவரை வீம்புக்காக சூழ்நிலை
கட்டுக்குள் இருப்பதைப்போல் காட்டிக்கொள்ளும். ஒரு வார மறியல்
 போராட்டம் ஏதோ திடீரென நடத்தப்படவில்லை, பல மாதங்களுக்குமுன்
கோரிக்கை வைத்து அறிவிப்பு கொடுத்து, பல இடங்களில் பல
 முறை குடும்பத்தோடு ஆர்பாட்டம், உண்ணாவிரதம் என எல்லா
போராட்டங்களும் அமைதியான முறையில் செய்து பின்தான் நடை
பெற்றது இந்த சாலை மறியல் போராட்டம். முக்கிய முதல் நிலை
தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், இதனால் போராட்டம் பிசு
பிசுக்கும் என அரசாங்கமும் காவல்துறையும் நினைத்தது. ஆனால்
அன்றைய கட்டத்திலே முதல் நிலை தலைவர்களின் வழிகாட்டிதல்
படி இரண்டாம் நிலைத்தலைவர்களால் நடத்தப்பட்டது. இரண்டாம்
நிலைத்தலைவர்களை கைது செய்ய முனைந்தபோது பலர் தலைமறைவு.
 சாலை மறியலுக்காக மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன, அதனால்
 இன்று வரை மரங்கள் வெட்டி வீசப்பட்டதை மரம்வெட்டி கும்பல்
என நக்கல் அடிக்கப்பட்டு வரப்படுகின்றது, ஆனால் இந்த மரங்கள்
யாருடைய மரங்கள்? அந்த மரங்கள் எல்லாம் அவர்கள் மற்றும்
அவர்களின் தாய்,தந்தை, முன்னோர்கள் நட்டு வளர்த்த மரங்களே,
மற்ற எல்லோரையும் விட அந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதற்கு
அந்த மரங்களை வளர்த்த அந்த மக்கள் தான் வருத்தப்படுவர், ஆனால்
 அதையும் மீறி அவர்களுக்கு தேவை இருந்தது. (பசுமைதாயகம்
அமைப்பு பல ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு அதை மரங்களாகவும்
ஆக்கி பிராயச்சித்தம் தேடிக்கொண்டது, ஆனால் மதத்தின் பெயரால்
வட மாநிலங்களிலே வெட்டி வீழ்த்தப்பட்ட மனித உயிர்களை மதம்
 சார்ந்த அமைப்புகளும், கட்சியும் எப்படி பிராயச்சித்தம்
தேடப்போகின்றன?)

முதல் இரண்டு நாட்களிலேயே போராட்டத்தின் போக்கு புரிந்துவிட்டது.
பேச்சுவார்த்தை நடத்தவும் விருப்பமில்லை, வன்னிய இனத்தோர் மீதும்,
வன்னிய கிராமங்களின் மீது மாபெரும் தாக்குதல் தொடுக்கப்பட்டது,
அது இதுவரை யாராலும், ஏன் வன்னிய இனத்தோரால் கூட இந்த
உலகிற்கு சொல்லப்படவில்லை துப்பாக்கி சூட்டில் பல வன்னியர்கள்
 சுட்டுக்கொள்ளப்பட்டு தியாகியாயினர் அப்போதும் கூட போராட்டம்
 கட்டுக்கு வரவில்லை.போராட்டத்தை கட்டுக்கு கொண்டுவர ஒரே
வழி கலவரம் தான், அதுவரை தலித் மக்கள் போராட்டத்தை வேடிக்கை
 மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர்,அவ்வப்போது சிறு சிறு
உரசல்கள் இருந்தன.
அப்போதுதான் காவல்துறையால் தலித் மக்கள் தூண்டப்பட்டு நேரடி
மோதல்கள் நடந்தன. எப்படி வன்னியர்களின் மறியல் போராட்டத்தை
தலித் மக்களை தூண்டுவதன் மூலம் முறியடிக்க முயற்சி செய்தனர்
என்பதைப்பற்றி விரிவாக முன்னாள் உளவுத்துறை அதிகாரி
அவருடைய பணிக்கால சாதனைகள் பற்றி குமுதத்தில் தொடராக
எழுதியதில் விவரித்துள்ளார். இதனால் வட மாவட்டங்களில் ஒரு
பத்து ஆண்டுகள் சாதித்தீ எரிந்து இப்போது ஒரு எட்டு
ஆண்டுகளாகத்தான் அமைதியாக உள்ளது.

ஆனால் எதுவுமே மறியல் போராட்டத்தை தோல்வியுறச்செய்யவில்லை.
 பின் அரசாங்கம் மிகப்பிற்பட்ட மற்றும் அட்டவணை பட்டியல் என
 ஒரு பிரிவை உருவாக்கி இட ஒதுக்கீடும் அளித்தது.

ஒரு சிறு இடைச்செருகல், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை இன்று பலர்
விமர்சிக்கின்றனர் தி.மு.க. ஆட்சி பீடம் ஏறவேண்டுமென
இப்போராட்டம் நடத்தப்பட்டது என பலர் இன்று விமர்சிக்கின்றனர்,
ஆனால் 1987ல் நடந்த இப்போராட்டம் இராமதாசு அவர்களின் சுய
 நலத்துக்காக நடைபெற்றது என யாரும் விமர்சிக்கவில்லை, ஏன்
அவரை கடுமையாக எதிர்க்கும் சில வன்னிய இனத்தலைவர்கள் கூட
இந்த போராட்டத்தை விமர்சித்ததில்லை, ஏனெனில் இது வன்னிய
 சமுதாயத்துக்காக நடத்தப்பட்டது, தனி மனிதனுக்காகவோ (அ)
அல்லது குறிப்பிட்ட மனிதர்களுக்காகவோ நடத்தப்பட்டது அல்ல.

பாட்டாளி மக்கள் கட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் அடுத்தப்பதிவில்
தொடரும்...
இதே தலைப்பின் அடுத்தப்குதிக்கான சுட்டி மருத்துவர் இராமதாசுவின்
மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 2