Thursday, January 22, 2015

வரலாற்றில் மலையமான்கள் - நா. முரளி நாயக்கர்



வரலாற்றில் மலையமான்கள் - (நா. முரளி நாயக்கர்)
===============================================


சேரர்களின் கிளை மரபினர்களாக மலையமான்கள் குறிப்பிடப்படுகிறார்கள். சேரர்கள் சங்ககால இலக்கியங்களில் தங்களை "மழவர்" என்றே குறிப்பிட்டுள்ளார்கள். கொல்லி மழவர் வல்வில் ஓரி, மழவர் பெருமகன் அதியமான் மற்றும் மலையமான்கள் சேரர்களின் கிளைப்பிரிவினர்கள் ஆவர். சேரர்கள் "வன்னியர்கள்" ஆவர். வில்லிபாரதம், திருவிளையாடல் புராணம், பேரூர் புராணம் மற்றும் பிற்காலச் செப்பேடுகள் சேரர்களை "அக்னி குலம்" என்றே குறிப்பிடுகிறது.



தமிழ்நாடு அரசு வெளியிட்ட, பாண்டிய பெருவேந்தர் காலம் என்ற நூலில் "பள்ளிகள் க்ஷத்ரியர்கள் என்றும் சேர குல அரசர் குலசேகர ஆழ்வார் வழிவந்தவர்கள்" என்றும் தெரிவிக்கிறது. சேரர் குலத்தில் அவதரித்த குலசேகரப் பெருமானார் அவர்கள் யது வம்சத்தில் திருஅவதாரம் செய்த கிருஷ்ண பகவானைக் குழந்தைப் பருவத்தில் தாதிகள் சொல்லும் பாவனைபோல "எந்தன் குலப்பெருஞ்சுடரே" என்றும் "நந்தகோபன் அடைந்த நல்வினை நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே" என்றும் அவர் (குலசேகரர்) அருளிச்செய்த "நாலாயிர திவ்ய பிரபந்தம்" பாசுரத்தில், ஆலைநீள் கரும்பு என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள். 

 கி.பி. 1283-ஆம் ஆண்டில் கேரளாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகன் "யாங்-திங்-பி" (Yang Ting-pi), சேரர் குலத்து கொல்லம் அரசர்களை "வன்னி" என்றும் "பன்னாட்டார்" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். சேரமான் பெருமாளுக்கு முடிசூட்டுதல் விழாவில் வேளாளர்கள் கலந்து கொண்டதை பற்றி "வெள்ளாளர்களின் கொங்கு ஆவணம்" குறிப்பிடுகிறது. அது:-

"நற்குடி நாற்பத்தெண் ணாயிரங் கோத்திர நாட்டவர்கள்
பொற்கிரீ டந்தனைச் சாற்றவந் தார்புவிக் காவலனாம்
அக்கினி கோத்திரன் புகழ்சேர மான்பெரு மான்றனுக்கு
வைக்கவும் வந்திடும் வேளாளர் வாழ்கொங்கு மண்டலமே.

எனவே "சேரர்கள் வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது முற்றிலும் உண்மையாகும். அத்தகைய சேரர்களின் கிளை மரபினர்களே "மலையமான்கள்" ஆவர்.

வன்னிய சமுகத்தை சார்ந்த மலையமான்கள் தங்களை "வன்னியர்" என்றும் "பள்ளி" என்றும் கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டம், அரூர் மற்றும் செங்கம் கல்வெட்டுகள், "வன்னியநார் ஆன மானாபரணச் செதியராயர்" என்றும் "வன்னியநாயன் செதிராயனென்" என்றும் "பெரிஉடையான் அம்மட்டாழ்வார் வந்னிய மக்கள் நாயன் கரிகாலசொழ ஆடையூர் நாடாழ்வானென்" என்றும் குறிப்பிடுகிறது. 

 மலையமான்களின் தலைநகரான திருக்கோவலூர் கல்வெட்டுகள் அவர்களை "வன்னிய மலையமான்" என்றும் "வன்னிய தேவேந்திர மலையமான்" என்றும் "ராஜ ராஜ சேதிராயன் வன்னியநாயன்" என்றும் "கிள்ளியூர் மலையமான் பெரிய உடையான் இறையூரான் சற்றுக்குடாதான் வன்னிய நாயன்" என்றும் குறிப்பிடுகிறது. குறிப்பாக "வன்னிய நாயன் சற்றுக்குடாதான்" தன்னை 25-ற்கும் மேற்பட்ட கல்வெட்டில் "வன்னிய நாயன்" என்றே குறிப்பிட்டுள்ளான். இம் மன்னனைப் போலவே சம்புவராயர் மன்னர்களும், நீலகங்கரைய மன்னர்களும் தங்களை "வன்னிய நாயன்" என்றே சோழர் காலத்திய கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள். 

 சங்க காலத்தில் குறிப்பிடப்பட்ட "மழவர் பெருமகன்" என்பதும் சோழர்கள் காலத்தில் வழங்கப்பட்ட "வன்னிய நாயன்" என்பதும் ஒரே பொருளை உடையதாகும். அதாவது "வன்னித் தலைவன்" என்பதாகும். மழவர்கள் வன்னியர்கள் ஆவர். கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் தருமபுரி கல்வெட்டு "வன்னியர்களை மழவர்" என்று குறிப்பிடுகிறது. "மழவூர்" என்ற ஒரு நாடு அக் காலக்கட்டத்தில் தருமபுரியில் இருந்ததை அக் கல்வெட்டு மேலும் குறிப்பிடுகிறது. பிற்கால அதியமான்கள் தங்களை கி.பி.14-ஆம் நூற்றாண்டில் "திரிபுவன மல்ல பூர்வ அதியரையர்கள்" என்று "கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டில்" குறிப்பிடப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவரது மகனை "பள்ளி" என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. அது :-

"திரிபுவன மல்ல புர்வாதிய குமரனானச் சிக்கரசிறுப்
பிள்ளைகளில் சொக்கந் கருவாயன்
பள்ளி இடுபூசலில் குதிரை குத்திபட்டான்"


(பொருள் : அதியமான் மரபின அரசன் குமரனானசிக்கரனின் கடைசிப் பிள்ளையான 'சொக்கன் கருவாயன் பள்ளி' இடுபூசலில் குதிரைக்குத்தி இறந்துள்ளான்).

மேலும் தருமபுரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், ஆம்பள்ளி என்ற ஊரில் உள்ள கல்வெட்டில் :

"ராஜராஜ அதியமானர் விடுகாதழகிய பெருமாள்
பள்ளிகளில் கங்க காமிண்டன் கட்டிய குட்டையைப்
பள்ளிச் சாந்தமாகக் காக்கன் கிளை விடுகாதழகிய
பெரும்பள்ளியாழ்வார்க்கு "


என்னுடைய குருநாதர், தொல்லியல் மேதை திரு. நடன. காசிநாதன் ஐயா அவர்கள், மேற்குறிப்பிட்ட கல்வெட்டிற்கு பொருள் தந்துள்ளார்கள். அது :-

"ராஜ ராஜ அதியமானின் உறவினர்களில் (பள்ளிகளில்) கங்க காமிண்டர்கள் இருந்துள்ளார்கள்" என்று ஐயா அவர்கள் பொருள் தந்துள்ளார்கள். எனவே "மழவர்களான அதியமான்கள் வன்னியர்கள்" ஆவர்.

திருக்கோவலூர் வட்டம், ஜம்பை கல்வெட்டு, "பள்ளிச்சேரியடிய நம்பியான கோவலரையப் பேரையன்" என்ற மலையமான் பற்றி தெரிவிக்கிறது. வன்னியர் வாழ்விடத்தை (பள்ளிச்சேரி) குறித்துள்ளமையால் இம் மலையமான் "பள்ளி" என்பது பெறப்படுகிறது. 

 சோழர் காலத்தில் "பிராமணர் வாழ்விடத்தையும் சேரி" என்றே கல்வெட்டில் வழங்கப்பட்டிருக்கிறது. செஞ்சி வட்டம், சிங்கவரம் கல்வெட்டு "பள்ளிக்கட்டுச் செதிராயன்" என்று குறிப்பிடுகிறது. இவன் வன்னிய சமூகத்தவன் என்பதை "ஸ்ரீ மதுராந்தகச்சதுர்வெதி மங்கலத்துப் பிடாகையாந மதுவூற் குடிப்பள்ளி சாமந்தன் மும்மலராயன் மகன் அருமொழிதெவனாந பள்ளிக்கட்டு மும்மலராயன்" என்ற செய்யார் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது. இச் செதிராயன் (மலையமான்) "பள்ளி இனக் குழுவை" (பள்ளிக்கட்டு) சேர்ந்தவன் என்பதை மேற்குறிப்பிட்ட கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. மேலும் "மும்மலராயன்" என்பது "மலையமான்களைப் குறிப்பதாகும். சாமந்தன் என்பது அரசனைக் குறிப்பிடும் பதமாகும்.

மலையமான் வன்னிய மன்னர்களுக்கும் காடவராய வன்னிய மன்னர்களுக்கும் இருந்த திருமண உறவை திருக்கோவலூர் வட்டம், திருவெண்ணைநல்லூர் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் "கவிச்சக்ரவர்த்தி கம்பர் எழுதிய சிலைஎழுபது" என்ற நூலில் "மலைய மன்னர்" என்று மலையமான் அரசர்களை வன்னிய சமூகத்தவர்களாக குறிப்பிடுகிறது.

மேற்சொன்ன உறுதியான சான்றுகள் மூலம், சேரர்களின் கிளை மரபினர்களான மலையமான்கள், "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது உறுதியாகிறது.