Tuesday, December 13, 2011

இலங்கையில் வன்னியர் - வையாப்பாடல்

இலங்கையில் வன்னியர்

இலங்கைக்கு வன்னியர் வந்த வரலாறு, ஓரளவு கோணேசர் கல்வெட்டிலும், பெருமளவு வையாபாடலிலும் சொல்லப்பட்டிருக்கிறது. குளக்கோட்டரசன் திருகோணமலைநாதர்க்குச் சேவை செய்யவென மருங்கூரிலிருந்து முதலில் முப்பது வன்னிய குடிகளைக் கொண்டு வந்தானென்றும் பின்னர், “அரன் தொழும்புக் காட்போதாதென்று தானத்தார் வரிப்பத்தார் ஆகியோரையும் கொணர்வித்தானென்றும், அவர்களுக்குட் பிணக்குவரின் தீர்த்து வைப்பதற்கென மதுரையிலிருந்து தனியுண்ணாப் பூபாலனென்ற வன்னிமையை வரவழைத்தானென்றும் கோணேசர் கல்வெட்டுக் கூறும்.

வையாபாடலின்படி, மதுராபுரியிலிருந்து அறுபது வன்னியர்கள், மாருதப்பிரவையின் மகன் சிங்கமன்னவன் (வாலசிங்கன், வரராசவசிங்கன்) காலத்தில் அவன் மணவினை சம்பந்தமாக இலங்கை வந்தார்கள். முதல் வந்த அவ்வறுபது வன்னியரும் அடங்காப்பதிக்கனுப்பப்பட்டனர். அவர்களுள் ஒரு வன்னியன் கண்டி நகரில் திசை (னுளையறய) ஆக இருந்தான். இவனோ சிங்கள மக்களுள் வன்னியகுலம் வளர்வதற்குக் காரணனாயிருந்தானென்று கொள்ளலாம்.

இவ்வன்னியர்கள் அடங்காப்பதியில் மேலும் குடியேற்றஞ் செய்ய விரும்பி, மதுரை, மருங்கூர், திருச்சினாப்பள்ளி, மலையாளம், துளுவம், தொண்டைமண்டலம் ஆகிய இடங்களிலிருந்து பதினெண் சாதி மக்களையும் வரவழைத்தனர். அப்பொழுது முல்லை மாலாணன், சிவலை மாலாணன், சருகி மாலாணன், வாட்சிங்கராட்சிஆகிய வன்னியர்களும் வந்து முள்ளி மாநகரிற் குடியேறினர்.

அதனைத் தொடர்ந்து கலி ஆண்டு 3392 இல் (கி. பி. 199இல்) வீரநாராயணச்செட்டி யென்போன் அல்லியரசாணிக்கு முத்துக் கொடுப்பதற்காக ஓடத்திற் புறப்பட்டுப் போனவன் புயலுக்கஞ்சிக் கடல்மலையைச் சார்ந்தான்அம்மலைக்குக் குதிரைமலை யென்று பெயரிட்டான். அங்கே தன் திரவியங்களைப் புதைத்து வைத்துக் காளியென்னுந் தெய்வத்தைக் காவலிட்டுக் கடற் சிலாப முண்டாக்கி, அங்கே ஐயனாரை நிறுவிப் பின் செட்டிகுளப்பதிக்கேகி வவ்வாலை”, என்ற பெயருடைய கேணி யொன்றையும் சந்திரசேகரன் கோயிலையும் உண்டாக்கினான். இச்சம்பவத்தைத் திரு. ஜே. பி. லுயிஸ் என்பார். பழைய தமிழ்க் கையெழுத்துக் குறிப்புக்களை ஆதாரமாகக் கொண்டு எழுதிய நு}லில், “சுமார் கி. பி. 247 இல் மதுரையிலிருந்து பல பரவர்களுடன் வந்த வீரவராயன் செட்டி என்ற பெயருடைய வாணிகன் ஒருவன் மரக்கலம் உடைந்து மன்னாரின் மேற்குக்கரையை வந்தடைந்தான்என்றும், “பின் தன்னைச் சேர்ந்தாருடன் வந்து செட்டிக்குளத்திற் குடியேறி அங்கே வவ்வாலைஎன்ற பெயருடைய கேணி யொன்றையும் சந்திரசேகரருக்குக் கோயில் ஒன்றையும் சுமார் கி. பி. 289இல் அமைத்தான்என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குதிரைமலை யென்ற இடப்பெயர் கொங்கு நாட்டிலுமிருக்கக் காணலாம். குமணன் ஆட்சியில் இருந்த முதிரமலை, பின்னர் குதிரை மலையென வழங்கலாயிற்று.

இலங்கைச் சிங்க மன்னவனுக்குப் பெண்ணனுப்பிய மதுராபுரி மன்னன் சிங்ககேது, கொங்கர் கோன் என்றும் வருணிக்கப்படுகிறான். எனவே, அக்காலத்திற் கொங்கு நாடும் மதுராபுரி மன்னனாட்சியிலேயே இருந்ததெனல்சாலும், குறித்த வீரநாராயணச் செட்டி. கொங்குநாட்டுக் குதிரைமலை என்ற ஊரிலிருந்து வந்தவனாகலாம். அதனாற்றான் போலும், தான் இலங்கையில் முதலிலே அடைந்த இடத்துக்குக் குதிரைமலையெனப் பெயரிட்டான்.

ஆதியில் இலங்கைக்கு வந்த வன்னியர்கள் மதுரை மாவட்டத்திலிருந்து வந்தனரென வையாபாடலும் பிறநு}ல்களும் கூறும். மதுரை நகரையண்டி அதன் வடமேற்கில் மாங்குளம்என்ற ஊரும், அந்நகரின் மேற்கில் கொங்கன் புளியற்குளம்என்ற ஊரும் ஆதித் தமிழ் நாட்டிலிருந்தன என்பதை, மதுரை வட்டாரத்திற் காணப்பட்ட மாங்குளம் கல்வெட்டுக்களாலும் புளியங்குளம் கல்;வெட்டுக்களாலும் இப்பொழுது அறிய முடிகிறது. அவ்வூர்க்களிலிருந்து வந்த வன்னியர்கள், தங்கள் சொந்த ஊர்களின் ஞாபகமாகத் தாம் புதிதாகக் குடியேறிய ஊர்களுக்கும் அப்பெயர்களை இட முனைந்திருப்பரென்பது பொருத்தமானதே. சில பெயர்கள் நிலைத்தும் சில நிலையாமலும் போயிருக்கலாம். அவ்வாறு நிலைத்த பெயர்களுள் வன்னி நாட்டிலுள்ள மாங்குளம் புளியங்குளம் என்ற அயலு}ர்ப் பெயர்கள் மதுரை நகரின் அயலேயிருந்த மாங்குளம், கொங்கன் புளியங்குளம் ஆகிய ஊர்களை நினைவுபடுத்துகின்றன.
 

அடங்காப்பதியில் வந்து குடியேறிய வன்னியர்கள், அப்பதியில் வாழ்ந்த பூர்வீக குடிகளின் கொடுங்கோன்மையைச் சகிக்க முடியாதவர்களாகி, அவர்களை அழிக்க எண்ணி மதுரையைச் சார்ந்த இடங்களிலிருந்து மேலும் சில வன்னியர்களை வரவழைத்தனர். இவ்வழைப்பையேற்று வந்த வன்னியர்கள், கறுத்தவராய சிங்கம், தில்லி (தெல்லி). திட வீரசிங்கன், குடைகாத்தான், மடிகாத்தான், வாகுதேவன், மாதேவன், இராச சிங்கன், இளஞ்சிங்கவாகு, சோதையன், அங்க சிங்கன் (அங்கசன்) கட்டையர், காலிங்கராசன், சுபதிட்டன் கேப்பையினார், யாப்பையினார் ஊமைச்சியார், சோதிவீரன், சொக்கநாதன் இளஞ்சிங்கமாப்பணன், நல்லதேவன், மாப்பாணதேவன், வீரவாகு, தானத்தார், வரிப்பத்தர் ஆகியோராவார்.