Saturday, December 17, 2011

கூவாகம் - அலிகள் திருவிழா எனும் கட்டுக்கதை.


கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் இந்தியா முழுவதும்
உள்ள அரவாணிகளின் சாமி எனவும், அங்கு நடைபெரும் சித்திரை மாதத்திருவிழாதான் அரவாணிகளின் மிக முக்கிய திருவிழா
எனவும் எல்லோராலும் பேசப்படுகிறது.
 இந்திய ஊடகங்களும்
 பல்வேறு அமைப்புகளும் கூத்தாண்டவரை அலிகளின்
குலதெய்வம் ஆக்கிவிட்டனர். ஆனால், அது உண்மை அல்ல.

"மகாபாரதப் போர் தொடங்கும் முன் பாண்டவர்கள் போரில் 
வெற்றிபெற 32 லட்சணங்களும் முழுமையாகக் கொண்ட 
ஆண்மகன் ஒருவன் பலியிடப்பட வேண்டும். இதற்காக
 தெரிவு செய்யப்பட்டவன் தான் அரவான். ஆனால் 
அவனுக்குத் திருமணமாகாத குறை இருக்கிறது. 
 இதனைப் போக்கினால்தான் அவன் முழு 
ஆண்மகன் ஆவான். அடுத்த நாள் சாகப் பொகிறவனுக்கு
 யார் பெண் தருவார்கள். எனவே கண்ணனே பெண்ணாக 
உருமாறி அரவானைத் திருமணம் செய்துகொள்கிறான்" 
என்று போகிறது கதை.
 இதில் உள்ள ஆண் பெண்ணாக மாறும் கதையை வைத்து 
கூத்தாண்டவரை அரவான் எனவும் அலிகளின் தெய்வம்
 எனவும் ஆக்கிவிட்டனர்.

கூத்தாண்டவர் - ஒரு விளக்கம்.

தலையை அறுத்து பலிகொடுப்பது என்பது பழங்காலத்தில் ஒரு
 வீரச்செயலாக கருதப்பட்டது. அவ்வாறு தலையை அறுத்துக் 
கொள்பவர்கள் வழிபாட்டுக்கு உரியவர்களாக ஆயினர். இந்த
 நாட்டார் கதைகள் மகாபாரதக் கதையிலும் இணைக்கப்பட்டது. 
இந்தியா முழுவதுமே பல்வேறு இடங்களில் அரவான் 
பலிகொடுக்கப்பட்ட கதை பல பெயர்களில் இருக்கிறது.

இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருக்கும் கதைகளில் அரவான்
 இரண்டு வரங்கள் கேட்டதாக வருகிறது.
 "முதல் வரம் - பலிகொடுக்கப்பட்ட 
பின்பும் பாரதப் போரை பார்க்க வேண்டும்,
 இரண்டாவது வரம் - கடைசி நாள் போரில் போரிட வேண்டும்" 
ஆகியன தான் அந்த வரங்கள். ஆனால், தமிழ்நாட்டின் அரவான்
 மூன்றாவதாக "ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும்"
 என்று கேட்பதாகக் கூறப்படுகிறது.

இந்த திருமணக் கதை மகாபாரதத்தில் இல்லாதக் கதையாகும். 
குறிப்பாக, தமிழ்நாட்டின் முதன்மை பாரதக் கதையான
 'வில்லிபுத்தூரார் பாரதத்தில்' இந்த திருமணக் கதை இல்லை.

பாரதக் கதையின் பின்னணி.

தமிழ்நாட்டின் மக்கள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு 
நிகழ்வு சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் 
நடந்தபோராகும். பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் புலிகேசியால்
 தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்கு 
பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்ம்மன், 
இதற்காக மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் 
செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை 
ஏற்படுத்தினான் என்கின்றனர்வரலாற்று ஆய்வாளர்கள். 
இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில்  புலிகேசியின்
 பாதாமி நகர் தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான்
 

(கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி) .
பாதாமி நகர்

நரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள்.
 பாதாமியை வென்ற படைக்கு தலைமையேற்ற பரஞ்சோதி 
என்கிற சிறுதொண்டரும் வன்னியர்தான். அவர்தான் பாதாமியில் 
இருந்து விநாயகர் சிலையை தமிழ்நாட்டுக்கு 
கொண்டுவந்தவர் (வாதாபி கணபதி).

சிறுதொண்டர் கொண்டுவந்த 
வாதாபி கணபதி - நன்னிலத்திற்கு 
அருகில் உள்ள திருச்செங்காட்டங்குடியில் 
உள்ளது 

வன்னியர்கள் வாழும்பகுதிகளில் இப்போதும் பாரதம்
படிக்கும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பாரதம்
 படிக்கும் பழக்கத்திலிருந்து பாரதக்கூத்து வந்துள்ளது. 
இத்தகைய தெருக்கூத்து முறைகள் வளர்ந்ததும் வன்னியர் 
சமூகத்தினரிடையேதான். பாரதக்கதையின் 
பாதிப்பால் வன்னியர்கள் வாழும் பகுதிகளில் 
திரௌபதி அம்மன் கோவில்கள் உருவாயின.

வன்னிய புராணம்

வாதாபி சூரனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட 
வன்னிய புராணம் மறுபுறம் வன்னியர்களிடையே கதையாக 
பரவியிருந்தது. வன்னியர்களின் தலைவன் வீரவன்னிய ராசன்.


வாதாபியை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். வாதாபி 
அரக்கனை அழிக்கப்புறப்படும் போது அவருடைய மனைவி 
மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என 
கவலைப் படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. 
நான் போரில் இறந்தால்
 நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு 
அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் 
ஆற்றைக் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல்
 திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் 
இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் 
விளக்கு அணையாததையும், மலர் வாடாதைதையும் அவள் 
கவனிக்கவில்லை.

போரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி
 விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். 
நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இதுதான் வன்னியக்
 கூத்து ஆகும்.

இப்படி தாலியை அறுத்துக்கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே 
இருக்கிறது. இன்றைக்கும் ஆடி 18 அன்று தாலியை அறுத்துக்கட்டும் 
சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர்.

இப்படியாக வன்னியர் புராணத்தில் உள்ள ஒரு கதை - பாரதக் 
கதையில் உட்புகுத்தப்பட்டு கடைசியில் அரவாணிகள் கதை 
ஆகிவிட்டது.

கூத்தாண்டவர் - வன்னியர்களின் சாமி

கூவாகம், கொத்தட்டை, அண்ணாமைலை நகர், தேவனாம் பட்டினம்,
 தைலாபுரம், பிள்ளையார் குப்பம் ஆகிய கடலூர், விழுப்புரம், 
புதுவை பகுதிகளில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. கோவை 
சிங்காநல்லூர் மற்றும் தருமபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் 
கூத்தாண்டவர் கோவில் உள்ளது.

அனைத்து கூத்தாண்டவர் கோவில்களும் வன்னியர்களின் கோவிலாக 
உள்ளன. அவற்றில் பூசாரிகளாக இருப்பதும் வன்னியர்கள்தான். 
இக்கோவிலுக்கு வழிபட வரும் சுற்றுக்கிராம மக்கள் அரவாணிகள் 
அல்ல. அவர்கள் சாதாரண மக்கள். தமது வேண்டுதலுக்காக தாலி 
கட்டிக்கொள்கின்றனர்.

வன்னிய புராணம், பாரதக் கதை - இவை இரண்டுமே வன்னிய 
மக்களுக்கு போர்க்குணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல்லவ 
மன்னனால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை. பாரதம் 
படிப்பதற்கென்றுபல மானியங்களை மன்னர்கள் அளித்துள்ளதை 
கல்வெட்டுகள் காட்டுகின்றன.

பாரதக் கதையின் பாதிப்பால் திரௌபதை அம்மன் கோவில்கள் 
உருவாயின. எல்லா திரௌபதியம்மன் ஆலயங்களும் வன்னியர் 
கோவில்களாக நீடிக்கின்றன. வன்னியர்களே பூசாரிகளாக உள்ளனர். 
 பெங்களூரின் முக்கிய விழாவான தர்மராஜா கோவிலின் கரகா 
திருவிழா இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.


பெங்களூர் தர்மராஜா கோவில் 

வன்னிய புராணத்தின் கதை பாரதக்கதையில் கலந்து கூத்தாண்டவர்
 அரவானாக ஆக்கப்பட்டுள்ளார். 1885 ஆம் ஆண்டில் வெளியான
 எட்கர் தர்ஸ்டனின் "தென்னிந்திய குலங்களும் குடிகளும்" என்கிற 
நூல் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவை ஒரு வன்னியர் 
விழாவாகவே குறிப்பிடுகிறது. அதில் எந்த இடத்திலும் அரவாணிகள் 
குறித்த குறிப்பு இல்லை.

மொத்தத்தில் கூவாகம் கூத்தாண்டவர் அரவாணிகள் சாமியும்
 அல்ல, அது அரவாணிகள் விழாவும் அல்ல. வன்னியர் மரபான 
நாட்டார் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியே கூத்தாண்டவர் ஆகும். 
குறிப்பாக, போருக்காகவும் நாட்டைக் காக்கவும் மக்களைத் திரட்டி 
அவர்களுக்கு வீரத்தையும் தியாகத்தையும் கற்பித்த ஒரு வரலாற்று
 நிகழ்வின் எச்சம் அதுவாகும்.

ஆதாரம்:
1. நாட்டுப்புறத் தெய்வங்கள் களஞ்சியம் - சு. சண்முகசுந்தரம் 2009,
2. தமிழ்ச் சமுதாயமும் நாட்டுப்புறப் பண்பாடும் - துளசி. இராமசாமி 1997,
3. தென்னிந்திய குலங்களும் குடிகளும் - எட்கர் தர்ஸ்டன் 1885,
4. வன்னிய புராணம், சைவ.கி.வீரப்பிள்ளை 1938,
5. Draupadi among Rajputs, Muslims and Dalits - Alf Hiltebeitel 1999