Wednesday, October 17, 2012

முதல்வர் ஜெயலலிதாவின் சுதந்திரதின உரையில் வன்னிய தியாகிகள் இருட்டடிப்பைக் கண்டிக்கிறோம். --- "அச்சமில்லை பத்திரிகை " - நா .இறைவன்








முதல்வர் ஜெயலலிதாவின் சுதந்திரதின உரையில் வன்னிய தியாகிகள் இருட்டடிப்பைக் கண்டிக்கிறோம்.
------------------------------------------------------------------------------------------------------------

இந்தியாவின் 66ஆவது சுதந்திரதினமான 15.08.2012 அன்று சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரையின் ஒரு பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


“....65 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய அடிமைத்தனத்தை தகர்த்தெறிய நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு மகத்தானது.

ஆங்கிலேயருக்கு எதிராக வீர முழக்கமிட்ட நெற்கட்டும் சேவல் பூலித்தேவன்; தூக்குமேடை ஏறிய வீரபாண்டியக் கட்டபொம்மன்; தாயின் மணிக்கொடி காக்க உயிர்துறந்த திருப்பூர்க் குமரன்; வீரத் தழும்புகளை விருதுகளாய் சுமந்த மருது சகோதரர்கள்; வீரமங்கை வேலு நாச்சியார்; மாவீரன் வாஞ்சிநாதன்; விடுதலைப் போராளி தில்லையாடி வள்ளியம்çம் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்; தம் கவிதைகள் மூலம் விடுதலை உணர்வூட்டிய மகாகவி பாரதி; நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழிவந்த சுதந்திரப் போராட்டத் தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்; தீரர் சத்தியமூர்த்தி; சுப்பிரமணிய சிவா; தீரன் சின்னமலை; மாவீரன் அழகுமுத்துக்கோன்; பெருந்தலைவர் காமராசர்; தந்தை பெரியார் என இந்திய விடுதலைக்காகப் போராடிய எண்ணற்ற தியாக சீலர்களைப் போற்றி வணங்குகிறேன்.”

ஒரு மாநிலத்தின் முதல்வர் சுதந்திரதின விழாவில் பேசுகிற பேச்சில் இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாகிகளின் பெயர்ப்பட்டியல் இடம்பெறும்போது:

முழுமையானதாகவும்; உண்மையான தியாகிகளின் பெயர்ப்பட்டியலாகவும்; விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகவும் இருக்க வேண்டும்.

முதல்வரின் சுதந்திரதின விழா பேச்சு என்பது - அரசியல் கட்சி மேடைப்பேச்சாளிகளின் பொறுப்பற்ற பேச்சாக இருந்துவிடக் கூடாது என்பது அதைவிட முக்கியம்.

2012 சுதந்திரதின விழாவில் முதல்வர் ஜெயலலிதா வாசித்த பேச்சு ஒரு கட்சியின் மேடைப்பேச்சாளி ஒருவனின் பொறுப்பற்ற பேச்சாக இருந்தது என்பதுதான் அவலம்.

பூலித்தேவன்
கட்டபொம்மன்
மருது சகோதரர்கள்
வேலுநாச்சியார்
தீரன் சின்னமலை
அழகுமுத்துக்கோன்

முதல்வர் ஜெயலலிதாவின் சுதந்திர தின விழா பேச்சில் இவர்கள் எல்லோரும் இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாக சீலர்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகளா?

வெள்ளையர்களால் தங்கள் ஆட்சிக்கு நெருக்கடி வந்தபோது தங்கள் ஆட்சியைக் காத்துக் கொள்ள வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய வர்கள் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

வெள்ளையனே வெளியேறு என போராடினார்களா?

இவர்கள் போராட்டங்கள் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள நடந்த போராட்டங்களே தவிர வெள்ளையனே வெளியேறு என இந்திய தேச விடுதலைக்காக நடந்த போராட்டமல்ல
எனவே இவர்களை இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகள் எனச் சொல்வது வரலாற்றுப் பிழை.

#
அடுத்த பிழை-

பெரியாரை இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகள் பட்டியலில் சேர்த்தது. இது அறிந்தே செய்த பிழை என்றே கருதுகிறோம்.

1926 ஆம் ஆண்டிலேயே பெரியார் காங்கிரசைவிட்டு வெளியேறிவிட்டார். அது கூட பரவாயில்லை. விலகியபின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வந்த நீதிக்கட்சியோடு சேர்ந்துகொண்டு # இந்திய விடுதலை இயக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டவர்.

அது மட்டுமல்ல -
இந்திய விடுதலைப் போராளிகளின் தியாகத்தால் பெற்ற சுதந்திர தினத்தை துக்க தினமென அறிவித்தவர்.

இவரை இந்திய விடுதலைப் போராட்ட தியாகி என போற்றுவதும் வணங்குவதும் - உண்மையான இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகளை அவமதிக்கும் செயலாகும். இதனை இந்திய போராட்ட தியாகிகளின் ஆவி கூட மன்னிக்காது.

விடுதலைப் பேராட்ட தியாகிகளின் பெயர்ப் பட்டியலில் காமராசர் பெயர் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் அவரைவிட அதிக காலம் சிறைத் தண்டனையை அனுபவித்த - ஆதிகேசவ நாயகர் பெயரோ; தென்னிந்திய பெண் போராளிகளில் அதிக கால சிறை தண்டனையை தன் கணவரோடும் குடும்பத்தோடும் அனுபவித்த பெண் போராளியான அஞ்சலையம்மாளையும் ஜமதக்னியையும் தியாகிகள் பட்டியலில் சேர்க்காதது ஏன்? அவர்கள் வன்னியர்கன் என்பதாலா? அல்லது - முதலமைச்சர் ஆனவர்களுக்குத்தான் தியாகிகள் பட்டியலில் இடமளிக்கும் தகுதி உண்டு எனக் கருதுகிறாரா?

அடுத்தது தில்லையாடி வள்ளியம்மை

இவர் தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் நல்வாழ்விற்காக - காந்தியடிகள் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்தவர்.
இவரும் கூட இந்திய விடுதலைக்காக இந்தியாவில் வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடியவர் அல்ல. தென்னாப்பிரிக்க வெள்ளையர் ஆட்சியில் இந்தியருக்கு உரிமை கேட்டுப் போராடியவரே.

இவரை இந்திய விடுதலைப் போராளிகள் பட்டியலில் சேர்த்ததும் கூடப் பிழையானதே.

தென்னாப்பிரிக்கா வாழ் இந்திய மக்களுக்காக போராடிய தியாகி என்பதால் இவரை தியாகிகள் பட்டியலில் சேர்த்ததைக் கூட ஒருவகையில் ஏற்கலாம்.

ஆனால் இவர் ஒருவர்தான் தென்னாப் பிரிக்காவில் வாழும் இந்தியர்களுக்காகப் போராடிய தியாகியா?

தென்னாப்பிரிக்காவாழ் இந்தியர்களின் நலனுக்காக நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் வெற்றி பெற்றதற்கு -
தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரம் என்ற நூலில் காந்தியார் மூன்று தியாகிகளின் பெயர்களைப் பட்டியலிடுகிறார்.

1.நாகப்பன் படையாட்சி 2.நாராயணசாமி 3.தில்லையாடி வள்ளியம்மை
இதுவே காந்தியடிகளின் தியாகப்பட்டியல்.

தமிழகத்தை தட்டி எழுப்ப இந்த மூன்று பெயர்களையும் தாரக மந்திரமாக தமிழகப் பிரச்சாரங்களில் பயன்படுத்தினார்
- (1969இல் வெளியான தமிழ்நாட்டில் காந்தி என்ற நூல் பக்கம் 252).

இந்த மூவரில்-
தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகப் போராட்டத்தில் முதல் பலியாகிய முதல் தியாகி நாகப்பன் படையாட்சியே. சிறைக்கொடுமை காரணமாக இவர் இறந்தது - 6.7.1909.

தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரப் போராட்டத்தில் இரண்டாவதாக பலியான இரண்டாவது தியாகி - நாராயணசாமி இவர் இறந்தது - 16.10.1910

தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகப் போராட்டத்தில் மூன்றாவதாக பலியான மூன்றாவது தியாகி - தில்லையாடி வள்ளியம்மை. இவர் இறந்தது 22.2.1914.

இதில் முதல் தியாகியான நாகப்பன் படையாட்சியையும் இரண்டாம் தியாகியான நாராயணசாமியையும் ஒதுக்கிவிட்டு -
மூன்றாவது தியாகியான தில்லையாடி வள்ளியம்மையை மட்டும்; தன் சுதந்திரதின விழா பேச்சில் - இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகள் பட்டியலில் சேர்த்ததற்கு என்ன காரணம்?

முதல் தியாகியான நாகப்பன் படையாட்சியின் தியாகம் குறைவானதா?
மகாத்மா காந்தியே அவரது தியாகம் குறித்து என்னவெல்லாம் சொல்கிறார் என்பதைப் பாருங்கள்.

"நாகப்பா தாய் நாட்டிற்காக உன் உயிரை நீ ஈந்தபோது நீ ஒரு இளைஞன் தானே? உன் குடும்பத்திற்கு அருளப்பெற்ற ஓர் ஆசீர்வாதமாகவே உன் தியாகத்தை நான் கருதுகிறேன். நீ இறந்துவிட்டாய் என்றாலும் சிரஞ்சீவியே" என்று இந்திய ஒப்பீனியன் பத்திரிகையில் காந்தியடிகள் எழுதியிருக்கிறார். (தமிழ்நாட்டில் காந்தி என்ற புத்தகம் 1969இல் வெளியிடப்பட்டது அதில் பக்கம் 39,40)

அதே புத்தகத்தில் 41ஆம் பக்கத்தில் -
பிளேம் போண்டீன் சிறையில் வள்ளியம்மாளுக்கும் நாகப்பனுக்கும் ஒரு நினைவுக்கல் 1914 ஜூலை 15ஆம் நாள் திறந்து வைக்கப்படுகிளது இந்த நினைவுக்கல்லைப் பிலிப் என்ற அம்மையார் திறந்து வைத்தபின் காந்தியடிகள் பேசியதாவது:

"வள்ளியம்மாளுடைய முகத்தைப் போன்று நாகப்பனுடைய முகம் எனக்கு அவ்வளவாக தெளிவாக நினைவில் இல்லை. ஆனால் அந்த பயங்கரமான சிறை வாழ்க்கையில் கடுமையான குளிரைத் தாங்கிக் கொண்டு அஞ்சாநெஞ்சம் படைத்த அந்த இளைஞன் எவ்வளவு இன்னல்களை அனுபவித்தான் என்பதை நான் நன்றாக அறிவேன். அவனை அங்கே அனுப்பியது எவ்வளவு அனாவசியமானது என்பதையும் நான் அறிவேன். ஆனால் அந்த சமயத்திலெல்லாம் சத்தியாகிரகிகளுக்கு என்ன நன்மை செய்யலாம் என்பதில் அல்லாமல்; அவர்களுடைய உணர்ச்சிகளை எவ்வாறு திருப்புவது என்பதில்தாம் நாம் கவனம் செலுத்தினோம்.

இன்று நாகப்பனுடைய உள்ளம் எவ்வளவு எஃகு போன்ற உறுதியுடன் இருந்தது என்பதை நாமெல்லோரும் ஒப்புக் கொள்கிறோம். உடல் நலமெல்லாம் சீர்குலைந்து போய் அவன் சிறையிலிருந்து வெளியே வந்தான். அப்போது அவன் சொன்னான். ‘இதனாலென்ன? ஒரே ஒரு முறைதான் நான் சாக முடியும். அவசியமானால் மீண்டும் நான் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன்.’

கடைசியாக அவன் கூறியது சரியாகப் போயிற்று. தோல்வியை அறியாத அவன் ஆன்மா பிரிந்தது. தென்னாப்பிரிக்காவில் பிறந்த நாகப்பன் படிப்பறிவில்லாதவன். அனுபவத்தில் ஆங்கிலம்; ஜூலு ஆகிய இரண்டு மொழிகளையும் பேசக் கற்றுக்கொண்டவன். 

அவனிடம் எந்தவிதமான துன்பத்தையும் சகித்துக்கொள்ளும் மனத் திண்மையும்; பொறுமையும்; நாட்டுப்பற்றும் சாவுக்கு அஞ்சாத மன உறுதியும் இருந்தன. இதைவிட ஒரு மனிதனுக்கு என்னதான் வேண்டும்" என்று நாகப்பனைப் பாராட்டிப் பேசுகிறார் காந்தி.

இரண்டாவது தியாகியான நாராயணசாமியின் தியாகத்தைப் பற்றி பாராட்டி எழுதி முடிக்கும்போது இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் காந்தியடிகள்:

‘‘நாகப்பனையும் நாராயணசாமியையும் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு ஜே’’! என முடிக்கிறார்.

இந்த இரண்டு மாபெரும் தியாகிகளையும் ஒதுக்கவிட்டு தில்லையாடி வள்ளியம்மையை மட்டும் விடுதலைப் போராட்டத் தியாகிப் பட்டியலில் சேர்த்ததற்கு என்ன காரணம்?

நாகப்பன் படையாட்சி என்ற பெயரை முதல்வர் ஜெயலலிதாவின் போராட்டத் தியாகிகளின் பட்டியலில் சேர்க்காததற்கு; வன்னியரில் ஒரு தியாகி இருந்தான் என்பதை இருட்டடிப்பு செய்ய வேண்டும்; வெளிச்சப்படுத்திவிடக்கூடாது என்பதைத் தவிர வேறு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.

அப்படியானால் நாராயணசாமியை ஏன் சேர்க்கவில்லை? நாராயணசாமியை சேர்த்துவிட்டு ; நாகப்பன் படையாட்சியை மட்டும் சேர்க்காமல் விட்டுவிட்டால் - வன்னிய சமூகத்திற்கு எதிரான துரோகம் வெட்ட வெளிச்சமாகிவிடுமே என்ற பயம் காரணமாக இருக்கலாம்..

அல்லது-
இரண்டாவது தியாகியான நாராயணசாமியும் ஒரு வன்னியனோ என்னவோ தெரியவில்லை.

இப்படி-
வன்னிய விடுதலைப் போராட்ட தியாகிகளின் பெயரை இருட்டடிப்பு செய்வது இப்போதுதான் ஜெயலலிதா செய்கிறர் என்பதில்லை.

இதற்கு முன்-
நெடுஞ்செழியன் கல்வியமைச்சராக இருந்தபோது தில்லையாடி வள்ளியம்மைக்கு விழா எடுத்து தன் முதலியார் பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டார். அப்போது நெடுஞ்செழியன் செய்ததும் - வன்னிய தியாகிகளின் பெயரை இருட்டடிப்பு செய்த துரோகமே.

நெடுஞ்செழியனுக்கு முன்பே காமராச நாடார் வன்னிய தியாகிகளின் பெயர்களை எப்படியயல்லாம் இருட்டடிப்பு மற்றும் துரோகங்களைச் செய்தார் என்பது குறித்து 1.9.1949 நாளிட்ட பல்லவநாடு இதழில் வன்னியகுல மித்திரன் இதழ் ஆசிரியரான பெரம்பூர் திரு.ஆ.சுப்பிரமணிய நாயகர் வன்னிய மக்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் தெளிவாக்கியுள்ளார்..

வன்னிய துரோகம் காமராசரால் ஆரம்பிக்கப் பட்டது. என்பதற்கு 1949இல் வெளியான மேற்கண்ட கட்டுரையும்; அது இன்றுவரை தொடர்கிறது என்பதற்கு - முதல்வர் ஜெயலலிதாவின் சதந்திர தின உரையில் இந்திய விடுதலைப் போராளிகளின் பெயர்ப் பட்டியலில் - தில்லையாடி வள்ளியம்மைப் பெயரை மட்டுமே குறிப்பிட்டுவிட்டு; முதல் தியாகியான நாகப்பப் படையாட்சியைஇருட்டடிப்பு செய்த துரோகமும் - உதாரணங்களாகும்.

ஜெயலலிதாவின் இந்திய வடுதலைப் போராட்டத் தியாகிகள் பட்டியலில் முக்குலத்தோர் வாடை அதிகமாக வீசுவதற்கும் வன்னிய விடுதலைப் போராட்டத் தியாகிகளின் பெயர்கள் முழுçமாக இருட்டடிப்பு செய்ததற்கும்; முதல்வரின் பேச்சைத் தயாரித்தவர் ஒரு முக்குலத்தோர் என்பதுதான் காரணமா?

பேச்சுத் தயாரிப்பவர்களை எல்லாம் அவர்களது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப பட்டியல் தயாரிக்க அனுமதிப்பது முதலமைச்சருக்கு அவப்பெயரைத் தேடித் தந்துவிடும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இத்தகைய இருட்டடிப்புகளும் ஒரு வகை வன்முறையே என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு சமூகத்தின் தியாகங்களை இருட்டடிப்பு செய்வதும். உண்மை வரலாற்றை மறைத்து ஒடுக்க முயல்வதும்தான் வன்முறைகளிலேயே கொடிய வன்முறை என்பதை காமராஜர் முதல் ஜெயலலிதா வரையிலான தமிழக முதல்வர்கள் இனியேனும் உணர வேண்டும்.
அல்லது தங்கள் மீது ஏவப்படும் இந்த கொடிய வன்முறையை அவர்களுக்கு புரியும் வகையில் வன்னியர் சமூகம் உணர்த்த வேண்டும்.

(அச்சமில்லை அக்டோபர் 2012 இதழில்) 

---------------------------------------- "அச்சமில்லை பத்திரிகை " - நா .இறைவன்