Saturday, July 12, 2014

சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜராஜனின் கட்டுப்பாட்டில் இருந்தது - கல்வெட்டு கிடைத்துள்ளது

சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜராஜனின் கட்டுப்பாட்டில் இருந்தது .
இது ராஜராஜனின் சோழர் குலத்திற்கு உரிமையான கோவில் .
புதிய கல்வெட்டு கிடைத்துள்ளது .

சிதம்பரத்தின் இன்னொரு பெயர் "பெரும்பற்றப்புலியூர் ".

இக்கல்வெட்டு கடலூர் மாவட்டம், சிதம்பரம், கமலீஸ்வரர் கோவில் தென்பகுதி தேவகோட்டம் சுவற்றில், ஐந்து வரிகள் கொண்ட கல்வெட்டு, தலை கீழாக உள்ளது.




சிதம்பரம், கமலீஸ்வரர் கோவிலில், முதலாம் ராஜராஜனின் (கி.பி.,985- -- 1014) கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம், கமலீஸ்வரர் கோவில் தென்பகுதி தேவகோட்டம் சுவற்றில், ஐந்து வரிகள் கொண்ட கல்வெட்டு, தலை கீழாக உள்ளது. இதை, அண்ணாமலை பல்கலைக்கழக வரலாற்றுத் துறை துணை பேராசிரியர்கள், திராவிட வரலாற்று ஆய்வுக் கழக இயக்குனர் கணபதிமுருகன், தலைவர் முத்துக்குட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

உத்தமப்பிரியன்: ஆய்வு குறித்து, அவர்கள் கூறியதாவது: ’ராஜ தேவர்க்கு யாண்டு’ என, துவங்கும் கல்வெட்டு எழுத்துகள், பெரும்பற்றப்புலியூர் மூலபருடையார் பற்றிய குறிப்பை தருகிறது. கல்வெட்டில், ராஜராஜசோழன், ’உத்தமப்பிரியன்’ என, போற்றப்படுகிறார். ராஜராஜ சோழன், தனது சிறிய தந்தை உத்தமசோழன் மீது கொண்டுஇருந்த அன்பால், உத்தமப்பிரியன் என, அழைக்கப்பட்டதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

உத்தமச்சோழன் நினைவாக, பழையாறை ஊர் (கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம், அரியப்புடையூர், மனப்புடையூர், நந்திபுரம், தாராசுரம் ஆகியவற்றை கொண்டது) அருகே உத்தமதானிபுரம் என்ற நகரத்தை, ராஜராஜசோழன் அமைத்திருந்தார். ஆடல் வல்லான் ஒருவனுக்கு, ராஜராஜ சோழன் அளித்த, ’கூத்தக்கானி’ பற்றிய விவரமும், கமலீஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டு, தமிழ் வரி வடிவத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடராஜர் சுவாமி கோவில் இடம், ராஜராஜ சோழன் நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்தது தெரிய வருகிறது. பெரும்பற்றப்புலியூர் கல்வெட்டில் குறிக்கப்பட்டு உள்ள, ’பெரும்பற்றப்புலியூர்’ என்பது சிதம்பரத்தின் பழைய பெயர். ’மூலப்பருடையார்’ என்ற பெயர், இறைவன் தில்லை மூலட்டானத்து (ஆதி மூலநாதர்) சுவாமியை குறிப்பதாக உள்ளது.

சோழர் கால கோவில் நிர்வாகத்தில், சம உரிமையும், பொறுப்பும் கொண்டவர்கள், ’மூலபருஷயர்’ அல்லது, ’மூலபருடையார்’ என, அழைப்பட்டனர். கோவில் நிர்வாக குழுவில், அர்ச்சகர், தேவகன்மிகள், கணக்கர், கார்யம் செய்வார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

கூத்தக்கானி: சோழர் கால கல்வெட்டுகளில், சிதம்பரத்தை, ’பெரும்பற்றப்புலியூர்’ என்றே குறிப்பிட்டுள்ளனர். ’கூத்தக்கானி’ என்பது கூத்தாடும் கலைஞர்களுக்கு வழங்கிய நில தானமாகும். இது, முழு கல்வெட்டாக இல்லாமல், ஒரு பகுதி மட்டுமே உள்ளது.

’பிரசஸ்தி’ இல்லாததால், எந்த ஆண்டைச் சேர்ந்தது என, அறிய முடியவில்லை. ஆனால், கோவில் வளாகத்தில் உள்ள துவார கணபதி, சோழர் காலத்தைச் சேர்ந்தவராக இருப்பதால், கமலீஸ்வரர் கோவில், சோழர் காலத்து கோவில் என, உறுதி செய்யப்படுகிறது. இந்த கல்வெட்டின் மூலம், கமலீஸ்வரர் கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட, 1,000 ஆண்டு பழமையான கோவில் என்பது, அறிய முடிகிறது. இவ்வாறு, பேராசிரியர்கள் கூறினர்.

http://temple.dinamalar.com/news_detail.php?id=32876